Tuesday, July 30, 2019


பிறக்கும் போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணரலால் இரவு ஒழுங்காக தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும் சக்தி இல்லை. இரண்டாவது குழந்தையின் கண்ணை பயன்படுத்தக் கூடாத திரவத்தை கொண்டு கழுவி விட்டார்கள். அக்குழந்தையின் கண்கள் வீங்கிவிட்டது. குடல் மந்தமும், மல சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது.
ஏற்கனவே பிறந்த முதல் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து நினைவாற்றல் இழந்து போனது. அந்த பெண்ணின் முதல் தங்கைக்கு தொடர் வயிற்றுப் போக்கு இருந்தது. இரண்டாவது தங்கை, திருமணம் நடந்து சில நாட்களிலேயே புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போனார். இப்படி திரும்பிய இடமெல்லாம் நோயை பார்த்த அப்பெண் ஒரு உறுதி எடுத்தாள். மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களை விரட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தாள் அந்த பெண். ஆம் அந்த பெண் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் தான் முத்துலட்சுமி அம்மையார். அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் பள்ளிகள் சென்று படிப்பதே பெரிய விஷயம். வயதிற்கு வந்துவிட்டால் பள்ளிகளை விட்டும் நிறுத்தி விடுவர். ஆனால் குடும்பத்தை ஆட்கொண்ட நோய்களை விரட்ட படிக்க வேண்டும் என்று ஆர்வமெடுத்த முத்துலட்சுமி ரெட்டி, படிப்பில் அதீத கவனம் செலுத்தினார். பள்ளிப்படிப்பை முடித்த முத்துலட்சுமிக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால் இந்தியா முழுவதும் மருத்துவம் படிக்க எந்த பெண்ணிற்கும் அனுமதி அப்போது இல்லை..
இன்று பிரதீபா, அனிதா எதிர்கொண்ட பிரச்சனையை தான் அன்று முத்துலட்சுமியும் சந்தித்தார். ஆனால் அப்போது நம்மை போல மக்களும், அரசியல்வாதிகளும் அப்போது இல்லை. முத்துலட்சுமி பற்றி அறிந்து கொண்ட, நீதி கட்சியின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பனகல் ராஜா, இவரை இங்கிலாந்திற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி செய்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வரும் வியாதிகள் பற்றி படித்தார் முத்துலட்சுமி.
குழந்தை பருவம் முதல் எனது வாழ்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை என்று தன்னை தானே சொல்லிகொள்ளும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். சென்னை மருத்துவ கல்லூரியில் ஆண்களோடு தனி ஒரு பெண்ணாக படித்த முத்துலட்சுமி அம்மையாருக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை. பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு பெண்களை வகுப்பறையில் உட்காரவே விடமாட்டார். அறுவை சிகிச்சைப் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்ணை அம்மையார் பெற்றவுடன், தனது வகுப்பறைக்குள் வரலாம் உட்காரலாம் என்று மனம் மாறியுள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியின் ஒரு பொன்னான நாள் என்று எழுதினார் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு. காரணம் எழும்பூர் மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் இவரே. பின்பு மருத்துவ உயர் படிப்பிற்கு பாரிஸ் சென்றார்.
சென்னை மாகாண சட்டசபையில் பங்குபெற்ற முதல் பெண். மருத்துவம் படித்த முதல் பெண். ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய பெண் முதல்வர் என எல்லாவற்றிலும் முதலிடமே அவருக்கு கிடைத்தது. தனது மருத்துவம் மக்களுக்கு சேவையாக இருக்க வேண்டும் என்று நினைத்த முத்துலட்சுமி அவர்கள், சென்னை அடையாரில் புற்றுநோய் நிறுவனத்தை ஆரம்பித்தார். பிற்காலத்தில் அதை மருத்துவமனையாக தரம் உயர்த்தி இலவச சிகிச்சையும் கொடுத்தார்.
தேவதாசி முறை ஒழிப்பு:
தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள், கணிகைகள், நர்த்தகி, நடன மங்கை என பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு, பெண்கள் கோவில்களுக்கு அர்பணிக்கப்பட்டனர். இந்த பெண்களுக்கு உடலில் திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது முத்திரை பதிக்கப்படும்.
கடவுள் முன் அமர்ந்து தாலியைக் கட்டிக்கொள்வார்கள். கி.பி.4 நூற்றாண்டில் இருந்து இந்த பழக்கம் உள்ளது. ராஜ ராஜ சோழன் தான் பிராமணர்களின் பேச்சை எல்லாம் கேட்டு இது போன்று திட்டங்களை கொண்டுவந்தவர். 8 முதல் 9 வயதுடைய குழந்தைகள் இப்படி பழக்கப்பட்டார்கள். ஆடல், பாடல் களையே பின்னாளில் பாலியலாக மாறியது.
கோவிலை கவனித்து வந்த பிராமணர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இரையானார்கள் பெண்கள். கோவில்களில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை 1886 ஆம் ஆண்டு முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஜோசான் பட்லர் என்பவர். இந்து மதத்தில் தலையிடக்கூடாது என்று பிராமணர்கள் இங்கிலாந்து ராணி விக்டோரியா விடம் வாக்குறுதி வாங்கி இருந்ததால் அவர்கள் இதில் தலையிடவில்லை. மதத்தை காட்டி பெண்களை தங்கள் இச்சைக்கு இரையாக்கி வந்தனர் பிராமணர்களும், ஜமீன்தார்களும். இதனை ஒழிக்க விரும்பினார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 1927 ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை தீர்மானமாக கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. இதை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்றார். மத விவகாரங்களில் தலையிடக் கூடாது. மதம் போய் விடும். தாசிகளை ஒழிப்பது கலையை ஒழிப்பதற்கு சமம் என்றார் அவர். தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்த பிராமணர்கள், சட்டசபையில் எதிர்த்து பேசினார்கள்.
உடனே சீறி எழுந்த முத்துலட்சுமி அம்மையார், “உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இந்த தொழிலுக்கு அனுப்புவீர்களா? என்று சட்டசபையில் கேட்டார். அவரின் பேச்சைக் கேட்ட அனைத்து ஆண் சட்டமன்ற உறுப்பினர்கள் தலை குனிந்தனர்.
இறுதியில் தீர்மானம் நிறைவேறியது. இதை பொதுமக்கள் கருத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றுக்கு விடப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார்.
இது குறித்து தனது நூலில் எழுதியுள்ள முத்துலட்சுமி அம்மையார், “நம் நாட்டின் சுதந்திரத்திற்காக நிறைய திட்டங்களை ராஜாஜி செய்திருந்தாலும், சமூக சீர்த்திருத்தத்தை பொறுத்தவரை, முக்கியமாக பெண் விடுதலையை பொறுத்தவரை அவர் ஒரு பழமைவாதி. மாற்றத்தை விரும்பாதவர்” என்று எழுதியுள்ளார்.
1947 ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக இருந்த போது, இந்த சட்டம் அமலுக்கு வந்தது. தேவதாசி முறை ஒழிப்பு மட்டுமல்ல, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் என பல்வேறு புரட்சிகளை கொண்டு வர போராடியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.
பெண்கள் தங்களுக்கான கொடுமையை முறியடிக்க பெண்கள் தான் முயற்சிக்க வேண்டும். என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வது வீண் தான் என்றார் காந்தி.
ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா என்றார் தந்தை பெரியார்.
தனது வாழ்நாளில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, கடமை முடிந்தது என்று இருந்துவிடாமல், சமூக அக்கறைக் கொண்டு சேவை செய்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். குறிப்பாக பெண் விடுதலைக்காக, அதுவும் ஆணாதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், அவரின் தன்னம்பிக்கையும் தைரியமும் இன்றைய கால பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஆகும். ஆனால் இன்றைய பெண்களுக்கு சினிமா நடிகர், நடிகைகளை தெரியுமே தவிர, டாக்டர் முத்துலட்சுமியை தெரியுமா என்றால் சந்தேகமே.
வாழ்கையில் எத்திசையில் திரும்பினாலும் கஷ்டமும், பிரச்சனையும் உங்களுக்கு வந்தாலும், டாக்டர் முத்துலட்சுமியை நினைத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் தன்னால் வரும்.

0 comments:

Post a Comment