Tuesday, July 9, 2019



சாமந்தி

விவசாயிகள் தங்களுக்கு உடனே பணம் கிடைக்க மஞ்சள் சாமந்தியை பயிர் செய்து பயன்பெறலாம்
கரும்பு சாகுபடி செய்தால் சர்க்கரை ஆலைகள் உடனே பணம் தருவதில்லை,நெற்பயிர்களில் அவைகளின் நல்ல விலையைத் தேடி செல்வது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதுபோன்ற விவசாயிகளுக்கு ஒரே வழி உடனே கையில் பணம் கிடைக்கும் மலர் பயிர்களை சாகுபடி செய்வதே. இந்த மலர்கள் சந்தைக்குச் சென்றவுடன் பணம் கைக்கு வந்துவிடுகிறது.
தற்போது இந்த மலர் பயிர்களில் கூடுதலாக லாபம் சம்பாதித்து கொடுப்பவை, நஷ்டம் வராத மலர் சாமந்தி. இதில் பல ரகங்கள் உள்ளன. கோ1 எம்.டி.,யூ 1,2 ஆகியவை மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும். கோ.2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும். சந்தைக்கு ஏற்றப்படி இவைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

மண், தட்பவெப்ப நிலை

வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்கவேண்டும். நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை. சாமந்தி ஒரு வெப்ப,மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு, குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கிவிடவேண்டும். நிலத்தை நன்கு சமன்படுத்திய பிறகு சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும், நடவும்

சேர் பிடித்த இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு வேர்ப்பாகம் அனைத்தும் மறையும்படி நடுதல் வேண்டும். சாமந்தியை ஜூன் - ஜூலை மாதங்களில் நடவேண்டும். பருவம் தவறி நடும்போது செடிகளில் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். நடும் முன் வேர்பிடித்த தளிர்களை, எமிசான் கரைசலில் (ஒரு கிராம் ஒரு லிட்டர்) தண்ணீர் கலந்த கலவையில் முக்கி நடவேண்டும். ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 1,11,000 சாமந்திச் செடிகள் தேவைப்படும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு கடைசி உழவின்போது இடவேண்டும். பின்னர் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, லேசாகக் கிளறி மண்ணினுள் மூடவேண்டும். மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரத்தை நட்ட 30 நாள்கள் கழித்து இடவேண்டும். மறுதாம்புப் பயிருக்கும் இதே அளவு உரம் இடவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30,45 மற்றும் 60ஆவது நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர் நட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் ஒரு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு, பின்செய்நேர்த்தி

தேவைப்படும்போது களை எடுக்கவேண்டும். செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.
மறுதாம்புப் பயிர்
நவம்பர் மாதத்தில் நடவுப் பயிர் பூத்து ஓய்ந்துவிடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, நடவுப் பயிருக்குப் பரிந்துரை செய்த அதே அளவு உரத்தினை இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு இலைப்பேன், அசுவினி இலைப்புழு
இவைகள் இலைகளில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேர் வாடல் நோய்
செடிகள் திடீரென வாடி காய்ந்து விடும். தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி காணப்படும். கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும்.
இலைப்புள்ளி நோய்
தாக்கப்பட்ட இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, இலைகள் வெளுத்துவிடும். இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படும். கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
வயது
நடவுப் பயிருக்கு 6-8 மாதங்கள், மறுதாம்புப் பயிருக்கு 4 மாதங்கள்.

அறுவடை

நட்ட 3 மாதங்களில் சாமந்தி அறுவடைக்கு வரும், பூக்களை சூரிய வெப்பத்திற்கு முன்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.

மகசூல்

ஹெக்டேருக்கு நடவுப் பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும். மறுதாம்புப் பயிரில் 10 டன்கள் கிடைக்கும்.

0 comments:

Post a Comment