Saturday, December 1, 2018

பிறக்கும் பொழுதும் கொண்டு வந்ததில்லை...
பிறந்து மண்மேல் இறக்கும் பொழுதும் கொண்டு போவதில்லை...

கேள்வி - செல்வத்தை தேடுபவன் ஆன்மீக மேம்பாடு அடைய முடியாது என்று சொல்பவர்கள் பற்றி !!??

பதில் - வகுப்பில் ஆசிரியர் பேசிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்து அவர்களை கண்டிக்கும் நோக்கத்தோடு ''அமைதி, அமைதி, சத்தம் மூச்சு விடக் கூடாது'' என்பார்.

அவர் சொல்கிறாரே என்று மாணவர்கள் மூச்சு விடாமல் இருக்க முடியுமா ? பேசாமல் இருங்கள், மூச்சு விடும் சத்தம் கூட வரக் கூடாது என்று சொல்வதைத்தான் அவ்வாறு சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அது போலவே இதுவும். இவ்வுலகில் வாழ பொருள் அத்தியாவசியத் தேவையாகும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. ஆனால், அது மட்டுமே வாழ்வின் குறிக்கோளன்று. அத்தியாவசியத் தேவைகளுக்காக பொருள் தேடியே ஆக வேண்டும். அது கடமையாகிறது. அதுவே அளவுக்கு அதிகமாக எனும் பொழுது நிலை மாறி கயமையாகி விடுகின்றது. எனவேதான் அழியும் பொருளைத் தேடாமல், அருளைத் தேடு என்று சொல்கிறார்கள்.

அதாவது பொருள் இவ்வுலக வாழ்வ்விற்குத் தேவைதான். ஆனால், அது அவ்வுலகிற்குப் பயணப்படும் பொழுது கூட வராது. அங்கே இறைவனின் அருள்தான் செல்லுபடியாகும். எனவே பொருளோடு கூட அருளையும் தேடு என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறார்கள். அருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்தில் பொருளைத் தேடாதே அருளைத் தேடு என்கிறார்கள்.

எனவே பொருளோடு கூட அருளையும் தேடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மனிதனை மிருகத்தனமுள்ளவனாக மாற்றுவதில் செல்வம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் செல்வத்தை சேர்ப்பதற்காகத் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வதில்லை.

செல்வம் சேர்க்க வேண்டும் என்ற வெறியானது, ஒருவனிடம் உள்ள உயர்ந்த பண்புகளை எல்லாம் அழித்து விடுகிறது. எனவே அவன் வாழ்க்கையே போர்க்களமாக ஆகி விடுகின்றது.

தன்னிடம் செல்வம் மேலும் மேலும் சேர வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் மன நிம்மதியை, மகிழ்ச்சியை அழிப்பதற்கு அவன் தயங்குவதே இல்லை.

அதை ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ அவன் கருதுவதே இல்லை. செல்வத்தைச் சேர்ப்பதற்காக ஊண், உறக்கமின்றி உழைக்கும் மனிதன், பிறகு தான் அடைந்த செல்வத்தைப் பாதுகாப்பதற்காக ஊண், உறக்கத்தை இழந்து போகிறான். இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் யான், எனது என்கிற அஹங்கார எண்ணமே ஆகும்.



உலகத்துப் பொருட்கள் மீது பற்று கொண்டு எனதென்பதும், உனதென்பதும் பொய்யான மனோபாவமே. இவையெல்லாம் நிலைக்காது. இவை யாவும் அழிந்து போகக் கூடிய பிரமைகளாகும். இறைவனின் அருட் கருணை மட்டுமே என்றும் அழியாத நிலையான செல்வம் என்பது தாயுமானவ சுவாமிகளின் பொதுவான கருத்து. இடைவிடாமல் செல்வம், செல்வம் என்று அதே நோக்கத்தோடு அலைந்து திரிபவர்கள், அந்த செல்வத்தை அடைந்து விடுகிறார்கள்.

ஆனால், உண்மையான மன திருப்தியையும், மகிழ்ச்சியையும், இன்பத்தையும் அவர்கள் இழந்து விடுகிறார்கள். உண்மையான சுகத்தையும், இன்பத்தையும் ஒருவன் பெற வேண்டுமானால் இறைவனின் திருவடிகளை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதை நான் சொல்லவில்லை, வள்ளலார் பெருமான் செல்கிறார்.

'' நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட நெறியுண்டு நிலையு முண்டு
ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு
உண்டுண்டு மகிழவே யுணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமு முண்டு
தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியான முண்டாயி னரசே'' என்கிறார்.

அருட்பெருஞ்சோதி இறைவா உன் திருவடிகளைப் பற்றி பக்தி செய்தாலே போதும், நான் வேண்டாமல் போனாலும், வாழ்வில் எல்லா இன்பங்களும் தானே எனை வந்து அடையும் என்கிறார்.

அதாவது பொருட் செல்வத்தை மட்டும் தேடுபவர்கள் அதை மட்டுமே அடைகிறார்கள். அருளை அடைவதில்லை. ஆனால், அருட் செல்வத்தை தேடிப் பெற்றவர்களோ, இறை அருளோடு கூட எல்லா விதமான பொருட் செல்வத்தையும் அடைந்து விடுகிறார்கள்.

எல்லோராலும் அருட் செல்வத்தை மட்டும் தேடி வாழ்வது என்பது இயலாத காரியம்தான். ஒவ்வொரு மனிதனும் உலகில் உயிர் வாழ்வை நடத்த கடமைப்பட்டவனாகிறான்.

அதற்காகப் பொருளைத் தேட வேண்டும் என்பது அவன் கடமையாகிறது.

இது இறைவனால் விதிக்கப்பட்ட கட்டளையே ஆகும். அவ்வாறு செயல்படும் பொழுது இறைவுணர்வோடு செயல்பட வேண்டும் என்பதே கோட்பாடு.

''பிறக்கும் பொழுதும் கொண்டு வந்ததில்லை ..பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுதும் கொண்டு போவதில்லை இடைநடுவில்
குவிக்கும் இச்செல்வம் சிவந்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக் கென்சொல்வேன் ?'' - பட்டினத்தார்.

இதை உணர்ந்து, தேவைக்குச் செல்வத்தைத் தேட வேண்டுமே அல்லாது. செல்வத்தை தேடி, அதைப் பெருக்கி வாழ்வதே வாழ்வின் இலட்சியம் என்று எண்ணி வாழ்பவன் ஆன்மீக மேம்பாடு அடைவதில்லை என்றே சொல்லப்படுகின்றது.



0 comments:

Post a Comment