Saturday, December 1, 2018

எச்.ஐ.வி வைரசினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு தொற்று இருப்பது தெரியாமலேயே எச்.ஐ.வி வைரசினைப் பரப்புகின்றனர். எனவே பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நீங்கள் உங்களையும் மற்றவரையும் எப்பொழுதும் பாதுகாக்கலாம்.
1) பாதுகாப்பான பாலியல் முறை:
நீங்களும் உங்கள் துணைவரும் எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் அல்லது பாலியலால் பரவும் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படவில்லை என்று உறுதிசெய்யும் வரை ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் ஆணுறையைக் கட்டாயமாகப் பயன்படுத்துங்கள். ஏனெனில் எச்.ஐ.வி ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்குப் பரவும் காரணிகளில் முதன்மையாக இருப்பது பாலியல் தொடர்பு தான். நீங்கள் (வாய்வழி உடலுறவு உட்பட) ஓரினச்சேர்க்கை போன்ற அனைத்து பாலியல் முறைகளிலும் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியமானது ஆகும்.
ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாலின பங்குதாரர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அதே போல் எச்.ஐ.வி தொற்று இல்லாத உங்களுடன் மட்டும் உடலுறவு கொள்ளும் துணையுடன் மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள். இவ்வாறு உடலுறவில் ஈடுபடுவதே பாதுகாப்பானதாக் அமையும்.
நீங்கள் முதன் முதலில் உடலுறவு கொள்ளுவதற்கு முன் உங்கள் துணையுடன் பேசுங்கள். இவ்வாறு பேசி உங்கள் துணைக்கு எச்.ஐ.வி தொற்றுக்கான ஆபத்து இருக்கிறதா எனக் கண்டுபிடியுங்கள். இருவரும் சோதனைப் பாருங்கள். சோதனை செய்த பிறகு 6, 12, 24 ஆம் வாரங்களில் மீண்டும் மீண்டும் இருவரும் பரிசோதனை செய்துப் பாருங்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுவதினால் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா என்ப‌தைத் தெளிவாகக் கண்டறிய முடியும். அதே சமயம் உடலுறவின் போது ஆணுரையைப் பயன்படுத்துங்கள்.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் நிறைய மது அருந்துவதோ அல்லது சட்ட விரோதமான போதை மருந்துகளை உபயோகிக்கவோ கூடாது. ஏனென்றால் இவற்றின் மூலம் உங்கள் பாதுகாப்பை இழந்து பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடலுறவின் முன் மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
2) பற்பசை அல்லது சவரக்கத்தி (Razor) போன்ற தனிப்பட்ட பொருட்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
3) யாருடனும் ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
எச்.ஐ.வி நோய்த் தொற்றினால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருந்தால் நீங்கள் எச்.ஐ.வி தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவரைக் கலந்தாலோசித்து ஆன்டி ரெட்ரோ வைரல் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்.
பாலியல் தொழிலில் ஈடுபடுவபர்கள், ஆணோடு ஆண் உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட துணைகளுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஆபத்தும் அதிக அள‌வில் உள்ளன.
சட்ட விரோதமான போதை மருந்துகளை உபயோகிப்பவர்கள் மற்றும் அதற்கான‌ ஊசிகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றிற்கான வாய்ப்புகள் அதிகம்.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் பாலியல் துணையாக இருப்பதும் நோய்த் தொற்றினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினைக் கொண்டுள்ளது.
நீங்கள் ஆன்டி ரெட்ரோ வைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதிலும், எச்.ஐ.வி தொற்றுக்கான ஆபத்தைக் குறைக்கப் பாதுகாப்பான பாலினச் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்துவதற்கான மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். நவீன உலகில் உடல் நலத்தோடு இருப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் ஒழுக்கமாக வாழ்க்கையைக் கடைபிடிக்கும் அனைவரும் சாதாரணமாகவே எச்.ஐ.வி மற்றும் எய்ட்சு நோய் பயம் இல்லாமல் வாழலாம். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment