Monday, October 29, 2018

அது இங்கிலாந்தில் இருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.. 'பட்டீ' (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர்.

அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீ தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.

அவரைத் தேடி ஒருவர் வந்தார்..வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின.

வந்தவர், வணக்கம் சொன்னார்..விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், 'சூடாக டீ குடிக்கிறீங்களா?' என்று கேட்டார்.வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.

'சொல்லுங்க, என்ன விஷயம்?' விவசாயி கேட்டார்.

'ஒண்ணுமில்லை. நான் லண்டனில் இருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.

அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க. அதான்  உங்க கிட்ட வந்து உதவி கேட்கலாம் என்று.வந்தேன்..

ரொம்பப் பெரிய காரா?' என்று கேட்டார் விவசாயி.
இல்லை, இல்லை. சின்ன கார்தான்' என்றார் வந்தவர்.

விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.

கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார்.

கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தார்.பிறகு, 'எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்!' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.

குதிரை அசையாமல் அப்படியே நின்று இருந்தது. 'பெய்லி (Bailey) இழுடா ராஜா!' இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவே இல்லை.

டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!' மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவே இல்லை.'என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா!' என்றார்.

அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுத்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார்.

ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க?அதுதான் எனக்குப் புரியலை

’'என் பட்டீக்கு கண்ணு தெரியாது..தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா..?

அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன்..அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு.,என்றார்..,

ஆம்.,இனிய நண்பர்களே..,

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.

ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’. வார்த்தைகளின் மகிமை அபாரமானது.

அதனால் தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது, கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார் வள்ளுவர்..💐🙏🏻🌷

0 comments:

Post a Comment